மலர்மிசை ஏகினான்
திருக்குறள்
தமிழில் தோன்றிய அனைத்து வகைப்பட்ட நூற்களில் தலையாய இடத்தில் வைத்து எண்ணப்படுவது திருக்குறளாம். இது குறள் வெண்பாவினால் எழுதப்பட்ட நூல். இந்நூல் சங்கம் மருவிய காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் “பதிண்ணென் கீழ்க்கணக்கு” நூற்களில் ஒன்று. இவர் சமயம் பற்றி நிறையக் கருத்துக்கள் கூறப்படுகின்றன. எனினும், திருக்குறளை உரிமை கோருவதில் மூன்று சமயங்களான சமணம், பெளத்தம் மற்றும் சைவம் ஆகிய முன்னிலை வகிக்கின்றன.
கடவுள் வாழ்த்து
இந்நூலின் ஆசிரியர் சமயம் பற்றி அறிய இந்நூலில் அமைந்துள்ள கடவுள் வாழ்த்து அதிகாரம் துணைப்புரிகிறது. கடவுள் வாழ்த்தில் மொத்தம் பத்துப் பாடல்கள். அந்த பத்துப் பாடல்களில் இங்கு ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு இங்கு ஆராய்வோம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் இல்லையா!
திருக்குறள் சமயம்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் - திருக்குறள் (3)
முதலில் மேல் கூறிய குறளுக்கு முதலில் உரையாசிரியர்கள் என்ன பொருள் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
மணக்குடவர் உரை:
மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார்.
“நிலம்” என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின் கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார். முற்படக் போகநுகர்வாரென்று கூறினர்.
பரிமேலழகர் உரை:
மலர்மிசை ஏனினான் மாண் அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடு வாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைத்த வடிவோடு விரைந்து சேறலின், “ஏகினான்” என இறந்த காலத்தால் கூறினார்.
அவர் மேலும் விரித்து, இதனைப் பூ மேல் நடந்தான்” என்பதோர் பெயர் பற்றிப் பிறிதொரு கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்.
மேற்கூறிய உரைகளை கூர்ந்து நோக்கும்போது இரண்டு உரையாசிரியர்களும் தங்கள் உரைகளில் ஒன்றுப்படுகிறார்கள். ஆனால், தங்கள் விரிவுரையில் முற்றிலும் வேறுபடுகிறார்கள். மணக்குடவர் உரையிலும், விரிவுரையிலும் தெளிவும், நேரிதின் பொருள் வருமாறும் உரை வகுத்திருக்கிறார். ஆனால், பரிமேலழகரோ தன் விரிவுரையில் நூல் ஆசிரியரிடம் இருந்து முற்றும் வேறுபடுகிறார். எங்ஙனமெனில், அவற்றை ஈண்டு விளக்குவோம்.
“மலர்மிசை ஏகினான்” என்பதற்கு “ மலரின்கண்ணே சென்றவன்” அல்லது “மலர் மேல் நடந்தவன்” என்பதுதான் நேரிடையான பொருள். இதில் இரண்டு உரையாசிரியர்களும் உடன்படுகிறார்கள். ஆனால், விரிவுரையில் பரிமேலழகர் தன்னுடைய உரையிலிருந்தே முரண்படுகிறார்.
“மலர்மிசை ஏகினான்” என்பதற்கு வலிந்து மலரை மனதிற்கு உருவகப்படுத்தி, அன்பால் நினைத்தவர்களின் உள்ளக் கமலத்தின்கண்ணே தோன்றுவான் என்று பொருள் கூறுகிறார். இது பொருந்தாது. என்னை?
மலர்மிசை ஏகினான் என்பதற்கு நேரிடையான பொருள் இருக்க ஏன் உள்ளக் கமலத்தை உருவகிக்க வேண்டும். இங்குதான், பரிமேலழகரின் உள்ள கிடக்கை வெளிப்படுகிறது. எங்கே இந்த உரை பிறிதொரு கடவுளைக் குறிக்குமோ என்று வலிந்துப் பொருள் கூறி பின்வந்த எல்லோரையும் மயக்கம் படச் செய்திருக்கிறார்.
இங்கு பரிமேலழகரை குறை சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை. உரையாசிரியர்களிடம் மிகவும் முக்கியமாக இருக்கவேண்டியத் தகுதி, காய்தல் உவத்தல் அகற்றி உண்மையான உரை வகுக்கவேண்டும் என்பதுதான். ஆனால், பரிமேலழகர் தான் சார்ந்த சமயத்தின்பார் மிக பற்று கொண்டு, உண்மை உரைக்காமல், வலிந்து உரை வகுத்திருக்கிறார்.
இங்கு ஒன்றைக் குறிக்க நினைக்கிறேன். கடவுள் பக்தனின் உள்ளத் தாமரையில் அமர்ந்திருப்பவனேயன்றி நடப்பவன் அல்ல. தமிழ் நல்நெஞ்சங்கள் இந்த உண்மையை மனதிற்கொண்டு மறுபடியும் அக்குறளைப் படிக்குமாறுக் வேண்டிக்கொள்கிறேன்.
“மலர்மிசை அமர்ந்தானது” என்று குறள் இருந்திருக்குமானால், பரிமேலழகர் தன் விரிவுரையில் கையாண்ட உருவகம் நன்று அமைந்திருக்கும். நாமும் இந்தக் கட்டிரையை எழுதியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
அருகன்
சரி. பரிமேலழகர் தன் விரிவுரையில் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பிறிதொரு கடவுள் யார்?. அவைகளை ஈண்டு விளக்குவோம்.
அந்த பிறிதொரு கடவுள் - சமண கடவுளான அருகன் தான் அவர். ஏன் அத்தொடர் மற்ற சமயக் கடவுளரைக் குறிக்காதா? எனில், குறிக்காது! அதற்கு இலக்கிய சான்றுகள் அரண் செய்யவில்லை.
என்செய்ய?
அப்படியானால், அத்தொடர் அருகனை குறிப்பதற்கு இலக்கியச் சான்றுகள் இருக்கின்றனவா? இருக்கிறது! நிறைய இருக்கிறது!!
அவற்றையும் ஈண்டு குறிப்போம்.
இலக்கிய முதன்மைச் சான்றுகள்
ஒன்று:
குறள் தோன்றிய காலத்திற்கு சற்று பின்னே தோன்றியதாகக் கருதப்படும் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், நாடுகாண் காதையில்,
“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது” - நாடுகாண் காதை (200 - 205)
இங்கு ஒன்றை நினைவுப் படுத்த விரும்புகிறேன். அஃதாவது, இளங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்தில் பல சமயக் கடவுளர்களைப் போற்றிப் பாடியிருக்கிறார். ஆனால், மலர்மிசை நடந்தான் என்ற சொற்றொடரை அருகக் கடவுளை தவிர வேறொரு கடவுளருக்கு பயன்படுத்தினாரில்லை. இது இலக்கியச் சான்றுகளில் முதன்மையுடைத்து என்பதில் ஐயமுண்டோ?
இரண்டு:
ஐச்சிறுங்காப்பியங்களில் முதலாக வைத்து எண்னப்படுவது “சூளாமணி” என்னும் நூலாம். இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றென வைத்திருக்க வேண்டியத் தகுதி இதற்குண்டு. தமிழில் தோன்றிய எல்லா காப்பியங்களிலும் மிக சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டது இந்நூல். எனக்கு மிகவும் பிடித்த நூற்களில் இதுவும் ஒன்று. இந்நூலிலிருந்தும் சான்றுத் தருவோம்.
இரதநூபுரச் சருக்கத்தில்,
“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” - 187
என்றும்,
“முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” - 188
என்றும்,
“மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” - 189
என்றும் குறித்திருப்பதைக் காணலாம்.
மூன்று:
அறநெறிச்சாரம் என்ற நூலின்கண் அமைந்த கடவுள் வாழ்த்தில்,
“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” - (1)
என்று வருவதைக் காணலாம்.
நான்கு:
அவிரோதி ஆழ்வார் அருளிய “திருவெம்பாவை” என்னும் நூலில்,
“வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்
பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்
தாரணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த
வீரியனார் பாடலோ வீதிதொறும் கேட்டிலையோ
காரிகையாய் நீஇன்னும் கண்கள் விழித்திலையோ
பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ
மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த
ஈரேழ் புவிக்கு இறையைப் பாடலோர் எம்பாவாய்” - (9)
என்று வருவதையும் காணலாம்.
ஐந்து:
ஜீவசம்போதனை என்னும் நூலின்கண் அமையப் பெற்ற பாடல்,
“பன்னிரண்டு மாகணமு மேத்தப்பைந் தாமரைடின்
சென்னி மிசைநடந்த சேவடியை - யுன்னியுயி
ரல்லாத அன்னியமே யென்னும் மதிகாரம்
நல்லா யினியுரைப்ப னன்கு” - (185)
என்ற பாடலாலும் இஃது பெறப்படும்.
ஆறு:
“திருப்பாமாலை” என்னும் நூலில், கடவுள் வாழ்த்துப் பாடலில்,
“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ! நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” - (1-5)
என்றும்,
“மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே”
என்று வருவதும் நோக்குக.
ஏழு:
உதீசி தேவர் அருளிய திருக்கலம்பகம் என்னும் நூலில்,
“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” - (74)
என்றும் வருவதைப் பார்க்கவும்.
எட்டு:
தோத்திரத் திரட்டு என்னும் நூலில்,
“தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” - (6)
என்றும்,
“திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” - (11)
என்று வருவதையும் காணலாம்.
ஒன்பது:
திரு இரட்டைமணி மாலை என்னும் நூலில்,
‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப் பாடிப் பணிந்து” - (1)
என்று வருவதையும் காணலாம்.
பத்து:
நிகண்டு நூற்களில் தலைச்சிறந்ததாகக் கருதப்படும் “சூடாமணி நிகண்டு” அருகனின் பெயர்களைக் கூறும்போது பின்வருமாறு கூறுகிறது!
“அநகன், எண்குணன், நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்
சினன் வரன் உறுவன் சாந்தன்
சினேந்திரன் நீதி நூலின்
முனைவன் மாசேனன் தேவன்
மூவுல குணர்ந்த மூர்த்தி
புனிதன் வென்றோன் விராகன்
பூமிசை நடந்தோன் போதன்..” - (9)
இங்கு ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் உள்ள அனைத்து நிகண்டுகளும், “மலர்மிசை நடந்தவன்” என்று அருகக் கடவுளையும், புத்தபிரானையும் தான் பகர்கின்றன.
இன்னும் நிறையச் சமண நூற்களில் இருந்து சான்றுகள் காட்டமுடியும். சீவக சிந்தாமணி ஒன்றே போதும், நிறைய சான்றுகள் காட்டலாம். விரிவஞ்சி இங்கே விடுத்தனம்.
முடிபு:
முடிபாக, இக்கட்டுரையைப் படித்தவர்களில் சிலருக்கு இன்னும் மனம் ஒப்பாது இருக்கலாம். அவர்களுக்கு நாம் சொல்வது இதுதான்; பக்திக்கு முக்கியம் கொடுத்து வளர்ந்த சமயங்களில் இச்சொல்லாட்சி பயின்று வராமை ஏன்? “மலர்மிசை ஏகினான்” என்ற சொற்றொடரை பொன்னேபோல் போற்றி தத்தமது நூற்களில் பயன்படுத்தாமை ஏன்? போன்ற கேள்விகளை தாங்கள் தங்களுக்குள்ளேயே கேட்டு அதற்கு தக்க பதிலை கண்டு கொள்ளுமாறு சொல்லுதும்.
அருகனுக்கும் புத்தனுக்கும் “மலர்மிசை ஏகினான்” பொருந்தும் என்றாலும், திருக்குறளின் உள்ள அதிகாரத்தை, குறிப்பாக புலால் உண்ணாமை போன்ற அதிகாரத்தை நோக்குங்கால், அச்சொற்றொடர் அருகனையேக் குறிக்கும் எனபதில் ஐயமில்லை. என்னை?
இரா. பானுகுமார்,
சென்னை
23 comments:
Dear Banukumar,
The article is very nice. Can I expect from you to write about the great epic in tamil"Cheevaga chinthamani?"
I really wonder, How come you are tryig to prove the perfectly neutral man "Thiruvalluvar" as Jain. what is the use of Proving him as Jain?
Whether Jainism is really practicable? In this modern world also the munis are going to public as naked. Is it not hurt the other feelings?
Thank you sir. Yes. I shall write it in different perspective later.
regards,
R.Banukumar
Chennai
Dear Thiru. Tamilmani sir,
Welcome and thanks for your comments.
1. What makes you thing that "Thevar Peruman" is a neutral personality? Could you explain please?
2. Jainism is very much practical and practicable.
3. What you refer is துறவறத்தார்.
Please refer these kurals.
"தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்" - 348
"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு" - 343
Okay. It's my turn. Tell me, to whom the above kurals refer to? Just compare the kurals with nowadays scenerio!.
Thanks again,
R.Banukumar,
Chennai
Hi Banukumar,
Thanks for your detailed answer. Please accept my sincere appreciation for your work eventhough I am differing from your views.
To answer your question:
1. Thiruvalluvar wanted to use the common term for all religions such as Aadhi baghavan.The term can be claimed by any religion. What he wanted was to bow the god. That is all. If he was a Jain, he might have used only Jainism terms such as "Arugan" or any Theerthankar name. All other Jain poets did so. But why not thiruvalluvar?
2. I do not believe Jainism is practicable. I had some Jain friends. they themselves not following Jain doctrines. Even I heard in Tamilnadu also Jains does not follow Jainism. Moreover Jains do not respect female equally. They always suppress Women unlike christian or Hindus. It is better to keep the religion under control. It is good to country not to spread such Religion. Nayanmars helped for this.
3. You never answered my question, If Jain saints go outside, they go by naked. Is it not hurt the feelings of others? Especially Women? Are they respect women? How your community women feel? I really wonder how they accept such a unacceptable practice. Moreover the Great Saints such as Mahaveera and other thirthankaras given some dharma based on that time period. Is it not necessary to review for modern world without spoiling the core value? (Revolution is not possible without any change-Mahaveera also did the same).
திரு. பானுகுமார்.
//அருகன் என்பதே சங்காலத்தில் முருகனாக மருகி இருக்கும் என்று தமிழ்சமணர்கள் கூட தங்கள் கடவுள் முருகன் என்று சொல்லுக்கிறார்கள். //
இப்படி ஒரு நண்பர் அண்மையில் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்து இணையத்தில் தமிழ் சமணத்தைப் பற்றிப் பேசுபவர் நீங்கள் மட்டுமே. அதனால் உங்களிடம் இந்தக் கருத்தைப் பற்றிய கேள்வி. இந்த கருத்து சரி தானா? என்ன தரவுகள் இருக்கின்றன?
குமரன் ஐயா!
என்னை பொருத்தவரை, முருகனுக்கும் சமணத்திற்கும் யாதொரு சம்பந்தம் இல்லை. சமணத்தில் 12ஆவது தீர்த்தங்கரர் பகவான் வாசுபூஜ்யர். அவருடைய யட்சன் குமாரன் ஆவார். இப்பெயரைக் கொண்டு யாராவது தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கலாம்.
முருகனுக்கும் யட்சன் குமாரனுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை விட வேற்றுமைகளே அதிகம். இந்தச் சுட்டியில் யட்சன் குமாரனை காணலாம்.
geocities.com/tamiljain/sasandevs/12devadevi.html
ஆனால் ஒன்றை இங்கே குறிக்க விரும்புகிறேன். முருகன் வேட்டுவத் தலைவன். சங்க காலத்தில் கடவுளாக ஏற்றுக் கொண்டாடப்பட்ட முருகன், பின்னாளில், மற்ற கடவுளரின் உறவினன் ஆக்கப்பட்டார். (உதா. சிவனுக்கு மகனாக)
என் அன்பு நன்பர் கோவி.கண்ணன் அவர்கள் எங்கு அதைக் கேள்விப்பட்டார் என்று தெரியவில்லை. விபரம் தெரியத் தந்தால் மேலும் அதைப் பற்றி ஆராயலாம். அது எனக்கு புதுச் செய்தியாக இருக்கலாம்.
இந்த விபரங்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்கும் என்று நினைக்கிறேன்.
இரா.பானுகுமார்,
சென்னை
தங்கள் விடையை வெகு நாட்கள் காலம் தாழ்த்திப் பார்க்கிறேன் பானுகுமார். குமார யட்சனைப் பற்றிய சுட்டிக்கு மிக்க நன்றி. மற்ற யட்சர்களையும் காணும் வாய்ப்பைப் பெற்றேன். தமிழ்சமணத்தைப் பற்றிய மற்ற சுட்டிகளும் தந்தால் மிக்க மகிழ்வேன்.
தங்களின் விடையையும் வேண்டுகோளையும் கோவி.கண்ணனிடம் சொல்கிறேன். அவர் உங்கள் விடையை இன்னும் பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
பகவான் வாசுபூஜ்யரின் யட்சன் குமாரன் என்று கூறியிருக்கிறீர்கள். ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் ஒரு யட்சன் உண்டா? அவர்களின் தொடர்பு என்ன?
என்னை ஐயா என்று அழைக்க வேண்டாம். அடியேன் வயதில் சிறியவனே.
அன்புமிக்க பானுகுமார் ஐயா,
அருகன் முருகனானதை எங்கு படித்தேன் என்பது சரியாக நினைவு இல்லை. நான் மயிலை சீனி வெங்கடசாமி அவர்களின் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அதில் இருந்ததா என்று தேடிப்பார்க்க வேண்டும். மீண்டும் சில நூல்களைப் புரட்டிப் பார்த்து அதுபற்றிய விபரம் தருகிறேன்.
மற்ற முருகன் கோவில்கள் சமணக் கோவிலாக இருந்ததற்கான வாய்ப்பு குறைவு அல்லது இல்லை என்று சொல்ல முடியும். ஆனால் பழனி மலையும், அதில் நிற்கும் அரை நிர்வாண தெண்டபானியும் எனக்கு சமண / புத்த தோற்றத்தைத் தான் நினைவு படுத்துகிறது. குறிப்பாக திண்டுக்கள், மதுரை ஆகிய பகுதிகளில் சமணர் மலைகள் இருக்கின்றன என்று நேசக்குமார் என்பவர் படங்களை இணைத்திருந்தினர். எனவே பழனி மலை கூட அவற்றில் ஒன்றாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.
மேலும் கோவணமற்ற தண்டாயுதபாணியின் தோற்றம், நீள காதுகள் இவை சமண புத்த சன்யாசியின் அடையாளமாகத்தான் தெரிகிறது. நிர்வாண சமணகடவுளுக்கு கோவணம் கட்டிய உருவமாக தண்டாயுதபாணியின் சிலை தெரிகிறது. இது பற்றி தங்கள் கருத்துக்களை மேல் நோக்குகிறேன்.
அன்புடன்,
கோவி.கண்ணன்
நன்றி. குமரன்!.
பகவான் வாசுபூஜ்யரின் யட்சன் குமாரன் என்று கூறியிருக்கிறீர்கள். ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் ஒரு யட்சன் உண்டா? அவர்களின் தொடர்பு என்ன?
ஆம். ஒவ்வொரு தீர்த்தங்கரர்களுக்கும் யட்சன், யட்சி உண்டு. இவர்களை சாசன தேவ தேவியர் என்றும் அழைப்பார்கள். தீர்த்தங்கரர்கள் நம்மை போன்று மனிதர்களாக பிறந்து பின் நிர்வாணம் (வீடுபேறு) அடைந்தவர்கள். இத்தீர்த்தங்கரர்கள் தவம் இயற்றும் காலங்களில் அவர்களுக்கு உதவிப் புரிந்தவர்கள் தான் இந்த சாசன தேவதைகள்.
இவர்களும் நம்மை போன்றே மனிதர்களாக பிறந்து, தம் நல்வினைப் பயனால், தேவ கதியில் பிறந்து நன்நெறிகளில் ஒழுகும் மக்களைக் காப்பவர்கள்.
பொதுவாக, இவர்கள் கணவன், மனைவியாகவே கருதப்படுகிறார்கள். சிலப்பதிகாரத்தில் யட்சிப் பற்றிய செய்தியைக் காணலாம். தமிழ் நாட்டைப் பொருத்தவரை, தர்மதேவி, சக்ரேஸ்வரி, பத்மாவதி ஆகியோர் வழிபாடு என்பது தொன்றுதொட்டு வழங்கிவருகிறது. நிறைய (கல்வெட்டு, இலக்கிய) ஆதாரங்கள் கொடுக்க முடியும். யட்சன் வழிபாட்டை விட யச்சி வழிப்பாடே மிகவும் பிரபலமாக விளங்கி வந்திருக்கிறது.
மங்கை, சுந்தரி, நாச்சியார், இயக்கி, பகவதி, அம்பிகை, அம்மன் என்ற வேறு பெயர்களும் உண்டு. (காண்க: சூடாமணி நிகண்டு)
யட்சன், யட்சிப் பற்றிய நூட்கள் தமிழில் உள்ளன; தருமதேவி அந்தாதி, தருமதேவி ஊசல், சாத்தையா பதிகம், சாத்தையா திருஇரட்டை மணிமாலை போன்றவை சாசன தேவதைகள் போற்றும் சில நூட்கள்.
நிறைய எழுத வேண்டியிருக்கிறது. என் அடுத்தக் கட்டுரை, ஆதிபகவன் என்று அழைக்கப்படும் முதல் தீர்த்தங்கரருக்கும், சிவனுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை விளக்கும். அது நிறைய தமிழ் மக்களுக்கு புதிதாகவும், வியப்பாகவும் அமையும் என்று நினைக்கிறேன்.
விரைவில் எதிர்பாருங்கள். ;-)
இரா.பானுகுமார்,
சென்னை 61
யானும் வயதில் சிறியவனே. :-))
ஐயா,
நன்றி!
/அருகன் முருகனானதை எங்கு படித்தேன் என்பது சரியாக நினைவு இல்லை. நான் மயிலை சீனி வெங்கடசாமி அவர்களின் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அதில் இருந்ததா என்று தேடிப்பார்க்க வேண்டும். மீண்டும் சில நூல்களைப் புரட்டிப் பார்த்து அதுபற்றிய விபரம் தருகிறேன்./
கிடைத்தால் மகிழ்வேன்!
/மற்ற முருகன் கோவில்கள் சமணக் கோவிலாக இருந்ததற்கான வாய்ப்பு குறைவு அல்லது இல்லை என்று சொல்ல முடியும்./
முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திருப்பரங்குன்றம். ஆனால், அங்கே முருக கடவுள் அமர்வதற்கு முன்னம் சமணம் கால்கொண்டு விட்டது என்பது நமக்கு கல்வெட்டுத் தரும் செய்தி (ஆதாரம்)
http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p=14
/ஆனால் பழனி மலையும், அதில் நிற்கும் அரை நிர்வாண தெண்டபானியும் எனக்கு சமண / புத்த தோற்றத்தைத் தான் நினைவு படுத்துகிறது. குறிப்பாக திண்டுக்கள், மதுரை ஆகிய பகுதிகளில் சமணர் மலைகள் இருக்கின்றன என்று நேசக்குமார் என்பவர் படங்களை இணைத்திருந்தினர். எனவே பழனி மலை கூட அவற்றில் ஒன்றாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு./
மறுப்பதற்கில்லை! குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருக்கும் இடம் என்று சொல்வதுபோல, குன்று இருக்கும் இடமெல்லாம் அருகன் இருக்கும் இடங்கள் என்று சொல்லவதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் எதிராக இருக்கவா போகிறது? ;-)
/மேலும் கோவணமற்ற தண்டாயுதபாணியின் தோற்றம், நீள காதுகள் இவை சமண புத்த சன்யாசியின் அடையாளமாகத்தான் தெரிகிறது. நிர்வாண சமணகடவுளுக்கு கோவணம் கட்டிய உருவமாக தண்டாயுதபாணியின் சிலை தெரிகிறது. இது பற்றி தங்கள் கருத்துக்களை மேல் நோக்குகிறேன்./
ஐயா, இது மிகச் சிக்கலான கேள்வி. இதற்கு பதில் எழுதுவதென்றால் முதலில் நாம் சார்ந்த மதங்களை விளக்கி வைத்துவிட்டு, சரித்திர ஆராய்ச்சி என்ற நோக்கில் ஆராய்ந்தோமானால் தான் இதனை நன்குப் புரிந்துக் கொள்ள முடியும்.
தற்போதைய காஞ்சிபுரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எத்துணை சமண (சமண பெளத்த) கோயில்கள் மதம் மாறி போயிருக்கின்றன. கிட்டதட்ட ஏழாம் நூற்றாண்டு வரையில், இங்கே சமண பெளத்த ஆதிக்கமே நிலைக் கொண்டிருந்திருக்கிறது. நூறு பெளத்த விகாரங்களும், எண்பது ஜினாலயங்களும் இருந்ததாக சீன யாத்திரிகர் யுவான் சுவாங் தம் பிரயாண நூலில் குறிப்பிட்டிருக்கிறார். (மகேந்திர வர்மனின் ‘மத்தவிலாச பிரகாசனம்’ என்ற நூலும்) இன்று அந்த கோயில்கள் எல்லாம் மற்ற சமய கோயில்களாக மாறியிருக்கின்றன.
உதாரணமாக, காஞ்சி காமாட்சியம்மன் (சமண தர்மதேவி கோயிலாக இருந்தது), வரதராஜபெருமாள் கோயில் (புத்தர் கோயில்), கயிலாசநாதர் கோயில் (ஆதிநாதர் கோயில்), கச்சீஸ்வரர் கோயில் (சமண கோயில்). தற்போது உள்ள ஒரே சமண கோயில் (சின்ன) ஜின காஞ்சியில், திருப்பருத்திகுன்றம் என்ற இடத்தில் உள்ள “திரைலோக்யநாதர்” என்ற மகாவீரர் ஜினாலையம் தான். இது காஞ்சியில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் காலத்தால் மிக முந்தியது. கி.பி.5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
[சமண சின்னங்கள் எப்படி இந்து சின்னங்களாக மாறியிருக்கிறது என்பதற்கு கீழ்ச் சுட்டியைப் பார்க்கவும்.]
http://www.hindu.com/2007/07/04/stories/2007070460201500.htm
மேலும், சிதம்பரம் கோயில் (பெளத்த கோயிலாக இருந்தது. மயிலையார் இதுப்பற்றி சொல்லியிருக்கிறார்), திருவாரூர் கோயில் (இதுவும் பெளத்த கோயில்தான்), திருப்புகலூர் கோயில் (சமண கோயில்) என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.
இவ்வடிப்படையில் நோக்கினால், பழனி கோயில் முன்னர் சமண, பெளத்த சம்பந்தப்பட்டு, பின்னால் முருக கோயிலாக மாறியிருக்க வாய்ப்புகள் அதிகம். மறுப்பதற்கில்லை!!
ஆனால், இதை வைத்து முருகனை சமணம் போற்றியிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இரா.பானுகுமார்,
சென்னை 61
//ஆனால், இதை வைத்து முருகனை சமணம் போற்றியிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
//
முருகனை சமணம் போற்றி இருக்கிறது என்று சொல்லவரவில்லை ஐயா... !
சமணக்கடவுள் அருகன் முருகனாக மாற்றப்பட்டிருக்கிறாரோ / மருகி இருக்கிறதோ என்று ஐயப்பாட்டை தெரிவித்தேன்.
காஞ்சி புரத்தில் தாரா தேவி என்ற பெளத்த பெண் தெய்வம் தான் காஞ்சி காமாட்சி என்று ஒரு குறிப்பை படித்தேன். தாரா தேவி சமணரா ? பவுத்தரா ?
ஐயா,
/முருகனை சமணம் போற்றி இருக்கிறது என்று சொல்லவரவில்லை ஐயா... !/
தவற்றை சுட்டியமைக்கு நன்றி!
/சமணக்கடவுள் அருகன் முருகனாக மாற்றப்பட்டிருக்கிறாரோ / மருகி இருக்கிறதோ என்று ஐயப்பாட்டை தெரிவித்தேன்/
என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரியான ஆதாரமின்றி ஏதும் சொல்லிவிட முடியாதில்லையா? :-)
/காஞ்சி புரத்தில் தாரா தேவி என்ற பெளத்த பெண் தெய்வம் தான் காஞ்சி காமாட்சி என்று ஒரு குறிப்பை படித்தேன். தாரா தேவி சமணரா ? பவுத்தரா ?/
இதுப் பற்றி டி.பி.கோபிநாத இராவ் என்பவர் நிறைய எழுதியிருக்குறார். ஆனால், எங்கள் வழி வழி நம்பிக்கைப் படி இது எங்கள் தர்மதேவியம்மன் கோயில். புத்த, அருக உருவச் சிலைகளுக்கும் இருக்கும் வேறுபாட்டை நிறைய அறிஞர்கள் கவனிக்க தவறிவிடுகிறார்கள் அல்லது தெரியவில்லை. தற்போது உள்ள புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ;-)
ஏன் மயிலையாரும் சில இடங்களில் தவறியிருக்கிறார். அதுபோலதான் இதுவும். அருக சிலைகளை, புத்த சிலைகள் என்று நினைத்து இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்.
"திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைன சமய சித்தாந்த விளக்கமும்" என்ற நூலில் காஞ்சிபுரம். தி. அனந்தநாத நயினார் அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.(நாளந்தா பதிப்பகம், தொ.பேசி:2472 1578). அதில் அறிந்துக் கொள்ளவும்.
இரா. பானுகுமார்,
சென்னை.
அன்புள்ள பானுகுமார்,
திருக்குறள் ஒரு சமண நூல் என்பது என் நம்பிக்கை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு நாணயம் வெளியிடப்பட்டு இருக்கிறது.அதில் உள்ள திருவள்ளுவர் உருவில் அவர் மழித்த சிரமுடன் இருக்கிறார், முக்குடை யும் உள்ளது.
மேலும் கோவி. கண்ணன் அவர்கள் துவக்கியுள்ள கருத்துரையாடலுக்கு எனக்கு தெரிந்த செய்திகளை பகிர்கிறேன்.
அருகன் முருகனாக மருவி இருக்க வாய்ப்பு அதிகம்.
சுவாமிமலை என்னும் திருவேரகத்தில் முருகப்பெருமானுக்கு எதிரில் யானை வாகனம் உள்ளது.
மயிலுக்கு பதில் யானை இருந்தது பற்றி கேட்ட போது தெளிவு இன்றி யானை கூட ஒரு வாகனம். போருக்கு செல்லும் போது அனுமந்த கொடியுடன் பெருமாள் செல்வது போல( சாதாரணமாக கருடக் கொடி)சமயத்திற்கு ஏற்றார் போல் வாகனமும் மாறும் என்றார்கள்.
யானைக்கு சமண மதத்தில் உள்ள இடம் அதிகம் என்பதால் இங்கு இதை நினைவு கூர்கிறேன்.
மேலும் இப்போது கூட சமண சன்னியாசியருக்கும் பெளத்த சன்னியாசியருக்கும் வித்தியாசம் பலருக்கு தெரிவதில்லை.
ஒரிசா சென்றிருந்த போது, கண்டகிரி, உதயகிரி ஒரு பெளத்த தலம் என்றே உள்ளூர்காரர்கள் அறிமுகம் கொடுத்தார்கள்.
சென்ற பின்பே அது சமண தலம் என்று அறிந்தேன்.
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் நூலில் தாராவதி என்பது பெளத்த தெய்வம் என்றும் தற்போது உள்ள திரெளபதி அம்மன் கோவில்கள் தாராவதி வழிபாட்டின் மருட்சி என படித்து இருக்கிறேன்.
இந்து மதத்திலும் தாராவதி என்ற பெயரிலேயே வடக்கில் (தாந்திரிக)தெய்வ வழிபாடு இன்றும் உள்ளது.
நன்றி
சந்திப்பின் மகிழ்வில்,
ராஜ்குமார்
Genial brief and this post helped me alot in my college assignement. Gratefulness you on your information.
//Genial brief and this post helped me alot in my college assignement. Gratefulness you on your information.//
Dear Anony :-)
If possible can you share that assignment with me? :-) Send it to my personal id. banukumar.r@gmail.com.
Thanks
Ra.Ba
//மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் //
குறளுக்கு பொருள் சொல்ல தகுதியானவனா என்ற ஐயம் எழுகிறது; ஆனால் அது ஏற்படுத்திய மன உருவை பகிரவேண்டும் என்ற உந்தலும் உள்ளது ..அதனால்,புரிந்ததை பகிர்கிறேன் :
மலரின் மேல் நடப்பது/வாழ்வது போல வாழ்ந்து சென்றவரின்(வர்களின்) மாண்புமிகு திருப்பாதங்களை சேர்ந்து/தொடர்ந்து நிலத்தின் மீது வாழ்பவர் நீடூளி வாழ்வர்.
நண்பரே, 'ஆதி பகவன்' என்பது 'ஆதி நாதன்' எனும் சமண கடவுள் என்பது ஆர்வத்தை தூண்டும் சிந்தனை. இருந்தும் இருந்தும் என்னால் ஏற்று கொள்ள இயலவில்லை. "மலர்மிசை ஏகினான்" பற்றி பேசிய நீங்கள் ஏன் "மாணடி " பற்றி பேச வில்லை?
முதல் பத்து அதிகாரத்தில் "அடி", "தாள்" என்று அவர் ஏழு குறள்களில் கூறி யுள்ளார். அந்த "அடி" என்பது என்ன?
மேலும் அவர் "தெய்வம்" என்ற வார்த்தையை பல குறள்களில் பயன் படுத்தி யுள்ளார். அதன் அர்த்தம் என்ன? "வானுறையும் தெய்வம்" என்கிறாரே. அதன் அர்த்தம் என்ன? அருகன்'' என்று நேராகவே சொல்லிவிட்டு போய் இருக்கலாமே.
நண்பரே, 'ஆதி பகவன்' என்பது 'ஆதி நாதன்' எனும் சமண கடவுள் என்பது ஆர்வத்தை தூண்டும் சிந்தனை. இருந்தும் என்னால் ஏற்று கொள்ள இயலவில்லை. "மலர்மிசை ஏகினான்" பற்றி பேசிய நீங்கள் ஏன் "மாணடி " பற்றி பேச வில்லை?
முதல் பத்து அதிகாரத்தில் "அடி", "தாள்" என்று அவர் ஏழு குறள்களில் கூறி யுள்ளார். அந்த "அடி" என்பது என்ன?
மேலும் அவர் "தெய்வம்" என்ற வார்த்தையை பல குறள்களில் பயன் படுத்தி யுள்ளார். அதன் அர்த்தம் என்ன? "வானுறையும் தெய்வம்" என்கிறாரே. அதன் அர்த்தம் என்ன? அருகன்'' என்று நேராகவே சொல்லிவிட்டு போய் இருக்கலாமே.
தோழர்..உங்கள் கருத்து மிக வழுவாக இருக்கிறது..எனக்கு சில கேள்விகள்..எமது தோழர் ஒருவர் சமணம் என்பது தமிழர் சமயம் தான்..சமணம் ,ஆச்சமணம் என ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார்..பறையம் என்னும் கோட்பாட்டு முறைக் குறித்தும் விவாதித்தார்..இதைப் பற்றிய தேடல் இருக்கிறதா..இருந்தால் எமக்கு தெளிவு படுத்துங்கள்..சமணம் வடக்கிருந்து இங்கு வர வில்லை எனவும்..இங்கிருந்து பிராமணர்களால் விரட்டப்பட்டு,பின் ஜைனம் என்கிற பெயரில் திரிபாக மாறியது எனவும்..ஜைனமும்,சமணமும் ஒன்றல்ல..சமணம் தமிழர்களின் உயர்ந்த மரபு என விளக்கினார்..சமணம் என்பது துறவு நிலைக் கல்வியாளர்களை குறிப்பதாகவும்..ஆச்சமணம் என்பது குடும்ப நிலையில் இருந்த கல்வியாளர்களை குறிப்பதாகவும் விளக்கினார்..”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” இதற்கு கூட அவர் முதல் அறிவைக் கொடுத்த கல்வியாளனை குறித்துதான் சொல்லப்பட்டிருப்பதாகவும்..கூறீனார்..இதைக் குறித்த தகவல் இருந்தால் எமக்கு சொல்லவும்..
முருகன் அருகன் ஆன கோவி கண்ணன் கருத்தைப் படித்தேன் சரவணன் சிரமணன் . ஆருகத மதம் ஆறுமுகம் பழனி முருகனின் சிலையின் ஒரு கை தொடைகளைப் பிடித்தப்படி இருக்கும் இது திருப்பதி சிலைக்கும் சரவண பௌகுலா சிலைக்கும் பொருந்தும் இவை எல்லாம் ஏதேச்சையானவை அல்ல இவை போன்ற இன்னும் பல ஒற்றுமைகள் உண்டு நீங்களும் இந்நோக்கில் கருத்தை பதிவு செய்யலாம்
கீராஇயக்குநரின் கருத்தில் உடன் படுகிறேன் சமணம் இங்கிருந்து வடக்குநோக்கிச் சென்று மீண்டும் தமிழகம் வந்த சமயமே என்பது தான் என் தேடலின் முடிவு தங்களின் தோழரின் கருத்தை அரிய ஆவல்
Excellent. Highly thought provoking.
Post a Comment